பாரதியின் வரிகளுக்கு இதுவரை திரைப்படங்களில் கொடுக்கப்பட்ட இசைவடிவங்களில் என்னை மிகவும் கவர்ந்ததாக "பாரதி" - ராஜாவை பற்றி சமீபத்தில் இன்னொரு தளத்தில் நான் பகிர்ந்து கொண்டது.
வரிகளுக்கு நிகரான இசைக்குறிப்புகள். அக்னி குஞ்சொன்று கண்டேனில் பாரதியின் ஆழ்மனது கொதிப்புகளை இசையின் போக்கிலேயே கண்டுவிடலாம். கேட்கும் மனதுகளையே அதிர்வுகளுக்கு உண்டாக்கக் கூடிய தாள வாத்தியங்கள். "நின்னைச் சரணடைந்தேன்" - பாரதியின் மனச் சோகத்தை, இயலாமையை, ஆற்றாமையை, பாரம் குறைந்த மனநிலை என பலவிதமான மன ஓட்டங்களை குறிப்பாய் உணர்த்தும் விதத்தில் இயல்பாகவே எடுத்து வைத்து விடுகிறது ராஜாவின் இசைக் குறிப்புக்கள். நிற்பதுவே பாடலின் ஆரம்ப இசையே அழகு. "காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?" என்ற வரிகளை ரொம்ப அழகாக ராகத்தின் மீது ஏற்றிவிடுகிறார். "கேளடா மானுட" - திரையிசையில் வந்த புதையல் என்றெ சொல்வேன். ராஜாவின் மெட்டிற்கு பாரதியே எழுதிக் கொடுத்தது போல, அச்சில் வார்த்தது போல வந்து விழுந்த வரிகள், மெட்டு. இரண்டாம் இடையிசையில் வந்த நாதஸ்வரம் என பாரதியோடு ரொம்ப நேர்த்தியாக தாழ்ந்த மக்களை சேர்த்துவிட பாலமாக அமைந்துவிடுகிறது இசை. ஆலாபனை போன்று நீட்டல், கூட்டல் என இல்லாமல் பாடலின் ஒவ்வொரு வரியும் பாரதி எப்படி இந்த சாதி ஏற்றத் தாழ்வுகளை கண்டு மனம்பொங்கி பாடியிருப்பானோ அப்படியே ஒரு பிம்பத்தை இசை கொணர்ந்துவிடுகிறது. "பெண்ணிற்கு ஞானத்தை வைத்தான்" என்ற வரிகளை பயன்படுத்தும் இடத்தில் பாரதியின் குரலுக்கு ஒத்தாக ஒரு பெண்ணின் குரலையும் புகுத்தியது பாடலுக்கே அணி சேர்க்கிறது. முடிவில் முத்தாய்ப்பாக வரும் பாடல் "நல்லதோர் வீணை செய்தேன்". இதை பாரதியின் சவ ஊர்வலத்திற்கெ பயன்படுத்தி விடுகிறார் ராஜா. மனோவும் குழுவினரும் "சொல்லடி சிவசக்தி எனை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்" எனப் பாடி முடிக்கையில் தொடங்கும் ராஜாவின் "வல்லமை தாராயோ" குரல் எப்போதுமே கண்ணில் நீரை வார்த்துவிடும் சக்தி பெற்றது. பாரதியின் "நல்லதோர் வீணை செய்தேன்" கவிதையை அவரது சவ ஊர்வலத்திற்கெ பயன்படுத்தியது சிறப்பிலும் சிறப்பு.
Bookmarks